Archives: 29/11/2022

odb

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்பட்டது

எனது முதல் குறுகிய கால மிஷனரி பயணமாக, ஆற்றங்கரையில் சபையைக் கட்ட உதவுவதற்காக, ஒரிசாவில் உள்ள காட்டிற்குச் சென்றேன். ஒரு நாள் மதியம், அந்த பகுதியில் தண்ணீர் வடிகட்டி இருக்கும் சில வீடுகளில் ஒன்றிற்குச் சென்றோம். எங்களை ஏற்றுக்கொண்டவர், கலங்கியிருந்த கிணற்று நீரை வடிகட்டியின் மேல் ஊற்றியபோது, ​​​​சில நிமிடங்களில் அனைத்து அசுத்தங்களும் அகற்றப்பட்டு சுத்தமான, தெளிவான குடிநீர் தோன்றியது. அந்த மனிதனின் வசிப்பிடத்தில், கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுவதன் அர்த்தம் என்ன என்பதை நான் பார்த்தேன்.

நாம் முதலில் நம் குற்ற உணர்ச்சியோடும், அவமானத்தோடும் இயேசுவிடம் வந்து, நம்மை மன்னிக்கும்படி கேட்கும்போதும், ​​அவரை நம் இரட்சகராக ஏற்கும்போதும், ​​அவர் நம் பாவங்களிலிருந்து நம்மைச் சுத்திகரித்து, நம்மைப் புதிதாக்குகிறார். கலங்கியிருந்த நீரைச் சுத்தமான குடிநீராக மாற்றியது போல் நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். இயேசுவின் பலியால், நாம் தேவனுடைய நீதியாகிறோம் (2 கொரிந்தியர் 5:21) என்பதையும், மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12) என்பதையும் அறிவது எவ்வளவு மகிழ்ச்சி!

ஆனால் நாம் இனி ஒருபோதும் பாவம் செய்ய மாட்டோம் என்று அர்த்தம் இல்லை என்பதை அப்போஸ்தலன் யோவான் நமக்கு நினைவூட்டுகிறார். நாம் பாவம் செய்யும்போது, ​​இந்த வடிகட்டியின் உருவகத்தைக் கொண்டு உறுதியடைவோம், "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்." (1 யோவான் 1:9) என்றறிந்து ஆறுதலடைவோம்.

நாம் தொடர்ந்து கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து நம்பிக்கையுடன் வாழ்வோம்.

 

தாராளமாக கொடுக்கப்பட்டது மற்றும் பகிரப்பட்டது

நானும் என் மனைவியும் எங்கள் உயர்கல்வியை முடித்தபோது, ​​குறைந்த வட்டி விகிதத்தில் ஒருங்கிணைக்க வேண்டிய கடன் நிறைய இருந்தது. நாங்கள் உள்ளூர் வங்கியில் கடனுக்கு விண்ணப்பித்தோம், ஆனால் நாங்கள் நீண்ட காலமாக அந்த நகரத்தில் வசிக்கவோ, வேலையோ  செய்யவில்லை என்பதால் நிராகரிக்கப்பட்டோம். சில நாட்களுக்குப் பிறகு, எங்கள் சபையின் மூப்பராக இருந்த என் நண்பரிடம் நடந்ததைச் சொன்னேன். "நான் இதை என் மனைவியிடம் குறிப்பிட விரும்புகிறேன்," என்று அவர் போகும்போது சொல்லிவிட்டுச் சென்றார்.

சில மணி நேரம் கழித்து,அலைபேசி அழைத்தது. அது என் நண்பன்தான், “நானும் என் மனைவியும் உனக்குத் தேவையான பணத்தை வட்டியில்லாக் கடனாகக் கொடுக்க விரும்புகிறோம்,” என்று அவர் முன்வந்தார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, அதனால், "அப்படி உங்களிடம் நான் கேட்கக் கூடாது" என்று பதிலளித்தேன். "நீ கேட்கவில்லை!" என் நண்பர் தமாஷாகப் பதிலளித்தார். அவர்கள் இரங்கி எங்களுக்குக் கடனைக் கொடுத்தார்கள், நானும் என் மனைவியும் எங்களால் முடிந்தவரை விரைவாகத் திருப்பிச் செலுத்தினோம்.

இந்த நண்பர்களின் தாராள குணத்திற்குத் தேவன் மீதான அவர்களின் அன்பே  காரணமென்று நான் நம்புகிறேன். "இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான்" (சங்கீதம் 112:5) என்று வேதாகமம் சொல்வதுபோல, கர்த்தரை நம்புகிறவர்களின் இருதயம் "திடனாயிருக்கும்" ,"உறுதியாயிருக்கும்" (வச. 7-8) .ஆகவே அவர்களின் வாழ்வில் நடக்கும் எல்லா நன்மைகளுக்கும் தேவன் தான் ஆதாரம் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

தேவன் நமக்கு வாழ்வையும் மன்னிப்பையும் கொடுப்பதில் தாராளமாக இருக்கிறார். நாமும் அவருடைய அன்பையும் நமக்குள்ளவற்றையும்  தேவைப்படுபவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் தாராளமாக இருப்போம்.

 

பாவத்திலிருந்து பரிசுத்தத்திற்கு

சிறுமியாக, என் மகள் பாலாடைக்கட்டிகளுடன் விளையாடுவதை விரும்பினாள். அதின் இரண்டு துளைகளிலிருந்து அவளது பளபளப்பான கண்கள் எட்டிப்பார்த்து, "அம்மா பாருங்கள்" என்று சொல்லி, முகமூடியைப் போல வெளிர் மஞ்சள் நிற சதுரத்தை முகத்தில் வைப்பாள். ஒரு இளம் தாயாக, அந்த முகமூடி எனது உண்மையான, அன்பு நிறைந்த ஆனால் மிகவும் அபூரணமான கிரியைகளை எனக்கு நினைப்பூட்டியது. அவை குறைவுள்ளவை, பரிசுத்தமானவை அல்ல.

தேவனுக்காகப் பிரித்தெடுக்கப்பட்ட, அவரைப் போல வாழ வகையறுக்கப்பட்டிருக்கும் அந்த பரிசுத்தமான வாழ்வை வாழ நாம் எவ்வளவாய் ஏங்கினாலும் ,பரிசுத்தத்திற்கு பதிலாக,நாளுக்கு நாள் குறைவுகளே  நம்மிடம் காணப்படுகிறது.

 

2 தீமோத்தேயு 1:6-7ல், பவுல் தனது இளம் சீடன் தீமோத்தேயுவிடம் அவருடைய பரிசுத்த அழைப்பின்படி வாழ அவரை வலியுறுத்துகிறார். அப்போஸ்தலன் பின்னர் "[தேவன்]  நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும்....கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்." (வச. 9) என்று தெளிவுபடுத்தினார். இப்படிப்பட்ட வாழ்க்கை நம் குணத்தால் அல்ல, தேவனின் கிருபையாலேயே சாத்தியமாகும். இது, "ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட" (வச. 9) கிருபை என்று பவுல் தொடர்கிறார். தேவனின் கிருபையை ஏற்று, அவை அருளும் வல்லமையை அடித்தளமாக்கி வாழ முடியுமா?

பெற்றோர், கடமை, திருமணம், வேலை, அல்லது நம் அயலாரை நேசித்தல் என்று எதுவாக இருந்தாலும், தேவன் நம்மை ஒரு பரிசுத்த வாழ்க்கைக்கு அழைக்கிறார் .நாம் பரிபூரணமாக இருக்க முயல்வதால் அல்ல, மாறாக அவருடைய கிருபையால்.